குஞ்சியேல்லோ கொழும்புக்கு வந்திட்டா

சுமார் இருபது வருடங்களுக்கு முன் கரவெட்டி கிழவிதோட்டத்திலை சின்னாச்சி எண்டால் எல்லாருக்கும் தெரியும். இப்ப குஞ்சி எண்டாத்தான் தெரியும். நானும் கன நாளாய் யோசிச்சனான். ஏன் இவாவை குஞ்சி எண்டு கூப்பிடினம் எண்டு. பெரியவர்களும் சரி சிறியவர்களும் சரி அவாவை குஞ்சி எண்டுதான் கூப்பிடுவினம். நான் மட்டும் எங்கள் உறவினர்களாக இருந்த படியினால் அம்மா எனக்கு “குஞ்சியம்மம்மா” எண்டு சொல்லித் தந்து நானும் என் சகோதரர்களும் அம்மம்மா என்றே கூப்பிடுவம். ஆனா குஞ்சியம்மம்மாவின் பிள்ளைகள். எல்லாம் தாயை குஞ்சியெண்டே கூப்பிடுவினம். எனக்குள் இருந்த கேள்வியை அம்மாவிடம் ஒரு நாள் கேட்டேன். அதற்கு அம்மா கூறினா. தன்ர தாய்க்கு இரண்டு ஆண் பிள்ளைகளும், இரண்டு பெண் பிள்ளைகளும். என்றும் அதில குஞ்சி தான் கடைசியாய் பிறந்த படியினால் அவாவை எல்லாரும் குஞ்சி எண்டு கூப்பிட அவையிட்ட பிள்ளைகளும் குஞ்சியெண்டெ கூப்பிட்டவை. இன்னுமொரு விடயத்தையும் அம்மா சொன்னா. அந்தக் காலத்தில தாயின் இளைய சகோதரியை சித்தி , அன்ரி எண்டு கூப்பிடுவதில்லை. சின்னம்மா அல்லது குஞ்சி எண்டே கூப்பிடுவினம். இது இப்படியே பழகி ஊர்க்காரர் எல்லாம் குஞ்சியெண்டே கூப்பிட தொடங்கிற்றினம்.

இப்ப குஞ்சி கொள்ளுப் பேரனையும் பார்த்துவிட்டாள். எல்லோருடனும் அன்பாகவும் நகைச்சுவையாகவும் பேசுவதால் ஊர் மக்களுக்கு பரிச்சியமாக போய்விட்டார். குஞ்சிக்கு கன நாளாய் கொழும்புக்கு போக வேணுமெண்டு ஆசை. பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில. மூத்த மகன் மட்டும் கலியாணம் செய்து கொண்டு பக்கத்து ஊரில் இருக்கிறார். எப்பவும் இடைசுகம் கலியாண வீடுகள், ஊர்க் கோயில் திருவிழா எண்டால் தாய் வீட்டு ஒழுங்கையால் அவரின் மோட்டார் சைக்கிள் வந்து போகும்.

முந்தியெண்டால் அடிக்கடி வெளிநாட்டுச் சனம் யாழ்ப்பாணத்துக்கு வந்து போகும். உந்த முகமாலை பாதை திறந்திருக்கிற நேரத்தில இவள் தெய்வானை அக்காவின்ர தேவகி குடும்பத்தோட வந்து போனாள். அப்ப வீட்டுக்கு வந்தாள். அப்பதான் சொன்னவள் நிர்மலா அக்காவுக்கும் ஊருக்கு வரவேணும் எண்ட ஆசையாம். உடன வர முடியாது ஏன் என்டால் இப்பதான் லண்டனில வீடு வாங்கினவா. அதோட பிள்ளைகளின்ர படிப்பும். அதால ஒரு ஐந்தாறு மாதத்திற்கு பிறகு தான் வருவா என்று தேவகி கூறிய தகவல் இது.

நிர்மலா ஒவ்வொரு நாளும் டொலிபோன் கதைக்கும் போது அடுத்த மாதம் வாறன் எண்டு சொல்லிச் சொல்லியே முகமாலைப் பாதையும் மூடியாச்சு. இனி எப்படி வருவது? எல்லாம் கஸ்ரம். நீ கொழும்புக்கு வாணை. வந்து அக்கா வீட்டை நில். அக்கா வீடும் சும்மா தானே இருக்கு எண்டு நிர்மலா கூற.

இப்ப இரண்டு மாதமாய் கொழும்புக்கு போற அடுக்கு. கிழவிதோட்டமே களை கட்டி விட்டது குஞ்சி கொழும்புக்கு போகப் போறா எண்டு. குஞ்சியும் வெளிநாட்டில இருக்கிற பிள்ளைகளுக்கு பைக்கற்று பண்ணி தபாலில் அனுப்ப மிளகாய் அரைக்கிறது. பொரி அரிசி மா திரிக்கிறது எண்டு ஒரே ஆரவாரம்;. சனத்தோட கதைக்க கூட நேரம் இல்லை. இவ்வளவு இருந்தாலும் ஒவ்வொரு நாளும் பூப்புடுங்கி கிழவிதோட்ட பிள்ளையார் கோவிலுக்கு ஒரு மாலை கட்டிக் கொடுக்க வேண்டும். அதற்கு பிறகுதான் காலைச் சாப்பாடு. சில நேரம் மத்தியானத்திற்கும் சேர்த்து உலை வைக்கப்படும். இத்தனைக்கும் இடையிடையே கொழும்புக்கு போன் பண்ணி அங்க இருக்கிற செல்லம்மாக்காவின் மகள்ளுடன் தனது பிரயாண ஒழுங்குகளை உறுதிப்படுத்திக் கொள்வார். போகும் திகதி கொழும்பில் வந்து விமானத்தில் வந்து பின்னர் பஸ்சில வெள்ளவத்தையில இறங்கிற இடம். நேரம் எல்லாம் இப்படியென ஏற்பாடு. இதனை பார்த்த பேரன் “என்ன குஞ்சி அமைச்சர் போற மாதிரி ஒழுங்குகள் நடக்குது” என்றான். “உனக்கு என்னடா விளையாட்டாய் இருக்கு. கொழும்புக்கு போறது எண்டால் சும்மாவோ விதானையிட்ட போக வேணும் பிறகு ஏஜியேட்ட போக வேணும் எண்டு எத்தனை வேலைப்பாடு. நீ என்னென்டா என்னோட விளையாடுறாய்” என செல்லமாக கோபித்தாள்.

கொழும்புக்கு போற நாளும் வந்திட்டுது. நாளைக்கு பயணம். இவா செல்லம்மக்கா சொன்னவா''பலாலியில செல் விழுதாம்'' ஒரு மோதகப்பூசையை பிள்ளையாருக்கு செய். அவா சொல்லுறது சரிதான் முதல் முதல் விமான பயணம். எண்டாலும் கிழவி தோட்ட பிளளையார் கைவிட மாட்டார். எண்டாலும் பாருங்கோ இங்க கொஞ்சப்பேருக்கு முகம் சரியில்லை. இந்த வயசிலையியும் கொழும்புக்கு போக வேணுமோ எண்டு. அதுக்கு என்ன செய்யிறது? அந்த நேரத்தில கஸ்ரப்பட்டு பிள்ளைகளை வளர்த்த படியால் தாயை கூப்பிடுதுகள். சில நேரம் இவா கனடாவிற்கு போயிடுவவாம் எண்டு சில பேரின் சில்லறைக் கதை. நான் எண்டெண்டு போவன். இஞ்ச கோவிலுக்கு மாலை கட்டிக் குடுக்க வேணும். இவன் பேரனின் கலியாணம் முடிய ஊருக்கு வந்திடுவன். எண்டு தனக்கு அண்டிய ஆட்களுக்கு சொன்ன கதை இது.

இண்டைக்கு பயணம் எல்லா ஒழுங்கும் சரி. கொழும்பில் இருந்து சிக்னல் கிடைத்து விட்டது அங்கு இறங்கும் போது அழைத்து செல்வதற்கு.

“டே ஜெயம் இவன் சீரிபி கிருஸ்ணபிள்ளையிட்ட காருக்கு சொல்லு உன்ர ஆட்டோவில போகலாம் தான். கரவெட்டியில இருந்து யாழ்ப்பாணம் போறதுக்குள்ள நாரி முறிஞ்சு போகும்” நடக்க முடியா நிலையிலும் பெரிய சூட்கேசுடன் குஞ்சியின் கொழும்பு பயணம் ஆரம்பம். கதைக்கமா இருந்தவையிலும் பயணம் அனுப்பும் சாட்டில் கொழும்பில் உள்ள பிள்ளைகளுக்கு பார்சல் கொடுக்க வந்திருந்தனர். “எணை குஞ்சி இதை குறை நினைக்கமா கொண்டு போ நீ போன் பண்ணு பிள்ளைகள் வந்து எடுக்குங்கள்” என்று தாளம் போட்ட கதைகள். சரி சரி எங்கட சனத்தின்ர குணமே இதுதான். தேவையெண்டால் தான் வருவினம்” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு காருக்கு ஏறினாள். பிள்ளையாரைப் பார்த்துக் கொண்டு ஒரு கும்பிடு போட்டுக் கொண்டு எல்லாருக்கும் கையசைத்து விடை பெற்றாள். இனி வெள்ளவத்தையில போய் இறங்கின பிறகுதான் நிம்மதி.

“கிழவி தோட்ட பிள்ளையாரே எவ்வளவு சனம் போகுதுகள் நான் மட்டும் கொழும்புக்கு போக வேணும் எண்டால் எங்கட ஊர்ச்சனத்திற்கு விடியாது” எணை அம்மம்மா எங்க கொழும்புக்கே என சக பிரயாணிகளின் விசாரணை. இதிலேயும் பாருங்கோ ரகசியமாக சில இளம்வட்டங்கள் கதைக்கிறது கேட்குது. “அங்க பார் கிழவிதோட்ட கிழவியை பெரிய சூட்கேசோட வெளிக்கிட்டுட்டா..பிள்ளைகள் அனுப்பிற காசில விசிட் பண்ணுறா.” இது குஞ்சியின்ர காதில விழுந்தாலும் காட்டிக் கொள்ளமால் பிரயாணத் துணைக்கு ஆள் வேணும். எண்டாலும் எங்கட சனம் நல்ல கெட்டிக்காரர் தான். எங்க இருந்து வாறன் எண்டதை என்ர சூட்கேசில இருந்ததை பார்த்து கண்டுபிடித்து கதைக்க தொடங்கிடுங்கள். பிளேனும் வெளிக்கிட்டு விட்டது. “ஏடா சுவாதம் குத்துவனே..பிளேனை மேலே தூக்கிப் போட்டு பேந்து கொஞ்ச நேரத்தில நிற்கிற மாதிரி இருக்கு..நான் நினைச்சன் சரி. இதோட என்ர கதை சரி. எண்டு வேண்டாத தெய்வங்கள் இல்லை. பேந்து தான் பக்கதில இருக்கிற பிள்ளை சொன்னாள் அம்மம்மா கொழும்பு வந்திட்டுது. என்னால நம்பவே முடியேல்லை. கொழும்பில வந்து இறங்கியாச்சு. எங்க அந்த இளம்வட்டங்கள் என குஞ்சியின் கண்கள் தேடின. ஒரு மாதிரி குஞ்சி பெடியளை கண்டு பிடிச்சிட்டா. “ யார் தம்பி கிழவி தோட்ட சனத்தை பற்றி கதைச்சது? கிழவி தோட்டத்தாரை பற்றி தெரியுமோ நல்லவங்கள் கோபம் வந்தால் தெரியாது.” எனக் காரசாரமாக விளாச பெடியள் நிற்கிற இடம் தெரியமால் மறைஞ்சிட்டுதுகள்.

வெள்ளைவத்தையில் வந்து இறங்க ஒரு ஆட்டோ வந்து பக்கதில நிண்டுது. ஏறுங்கோ அம்மா எங்க போக வேணும் கொண்டு போய் விடுறன். இது கொழும்பு ஆட்டோகாரனின் அன்பு வழியும் வார்த்தைகள். “நல்ல கதை எனக்கு தெரியாதே கொழும்புப் புதினம். போன முறை அன்னம்மாக்கா வந்து எல்லாத்தையும் குடுத்திட்டு வெறுங்கையோட போனது. இவர் வந்திட்டார்” இதற்கு முதல் நிர்மலா சொல்லிய அறிவுறுத்தலும் நான் சொன்ன ஆட்கள் வருமட்டும் இருக்கிற இடத்தை விட்டு அசையக் கூடாது.

இப்போது கொழும்பில் குஞ்சி தனது பயணத்தை நிறைவு செய்து கொண்டு ஊரில் இருக்கும் உறவினர்களுடனும் வெளிநாட்டில் இருக்கும் பேரப் பிள்ளைகளுடனும் தனது பயண அனுபவத்தை கதைத்துக்கொண்டு இருக்கிறா.

11 comments:

said...

அந்த கால ஆச்சி பயணம் போகிறாள் என்ற கதை போல இந்த கால உங்கடை கதையும் நல்லாயிருக்கு

said...

நல்ல கதையப்பு மோன. எங்கட பேச்சு வழக்கில இருக்கிற சொற்களைக் காப்பாத்துற இன்னொரு ஆள் நீங்க... குஞ்சியம்மா கதைசொன்ன பேரனோ...

மற்றபடி இதுல நகைச்சுவை எண்டா நீங்க நகைச்சுவை நையாண்டி வகைக்குள்ள வகைப்படுத்தினதுதான்.:)

ஆனா நல்ல கதை.குறைவிளங்கஏலா

said...

நன்றி அகிலன். நீங்கள் எல்லாம் எம்மை வாழ்த்துவது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

said...

வணக்கம் சின்னக்குட்டி.பார்த்தியளோ அந்த ஆச்சி பஸ்சிலில் பயணம் போக. இந்த குஞ்சி விமானத்தில் கொழும்புக்கு வந்திட்டா. எல்லாம் கால மாற்றம்

said...

தாசன்,
உங்களை வலைப்பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.........
உங்கள் கதை என்னை மீண்டும் ஊருக்கு அழைத்துசெல்கிறது

-சிதம்பரம்-

said...

//உங்கள் கதை என்னை மீண்டும் ஊருக்கு அழைத்துசெல்கிறது//

ஹா..ஹா சிதம்பரம் ஜப்பானில் இருக்கும் உங்களை இந்த கதை மூலமாகவெண்டாலும் ஊருக்கு அழைத்து சென்றிருக்கின்றேன் என்றால் அது எனக்கும் சந்தோசம் தான்

said...

அப்பு தாசன்!
இப்ப கொழும்பு போறதும் ,வெளிநாடு போறது போல தானே, சின்னக்குட்டியர் சொன்னாப்போல 'ஆச்சி பயணம் போறா' போல கிடக்கு..என்ர வடமராட்சிக் கூட்டாளிகள் கூறும்,கிழவி தோட்டம் போல சொல்லுகள், பழசைக் கிளரியது..

said...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said
('ஆச்சி பயணம் போறா' போல கிடக்கு)
''ஆச்சி பயணம் போறா'' இந்த கதை ஆசிரியரின் எழுத்துக்கு நான் 0(சிரோ)

உங்களின் ஆசிகள் தொடர்ந்து வருக.

said...

தாசன் சென்றவார(16.09.2007) ஞாயிறு வீரகேசரியில் இந்தக் கட்டுரை வெளிவந்துள்ளது.

said...

வந்தியத்தேவன் வீரகேசரியில் பார்த்திர்களா? மிக்க நன்றி

said...

கீற்றில் இந்தக் கதையை வாசித்து மகிழ்ந்தேன்.
அழகான ஈழத் தமிழ்நடையில் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள் நண்பரே :)